ஜெயலலிதா பொதுக்கூட்ட சாவுகள் யார் பாவத்தில் சேரும்? — எமதர்மன் கணக்கு.

எமதர்மனின் அலுவலகம்… சித்திரகுப்தன் சற்றே குழப்பத்துடன் அமர்ந்திருக்கிறார். இதைக்கண்ட எமன் வினவுகிறார்…

“என்ன சித்ரகுப்தா? பிறந்த நாளும் அதுவுமாக உன் முகம் ஏன் வாட்டமாக உள்ளது?”

“பிரபோ! பூலோகத்தில் சற்று சிக்கலான மரணம்… அதன் கர்மாவை யார் பெயரில் எழுதவேண்டும் என குழப்பமாக உள்ளது.”

“என்ன அது? விவரமாக சொல்!”

“ நேற்று தமிழ்நாட்டில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் தலைவி வரவிற்கு வெகுநேரம் வெயிலில் காத்திருந்த களைப்பில் இரு முதியவர்கள் மரணம். இந்த கர்மாவை யார் பெயரில் சேர்ப்பது?”

“யாரெல்லாம் இதில் காரணிகள்?”

“இறந்தவர்களின் பிள்ளைகள்… பணத்திற்கு ஆசைப்பட்டு கூட்டி வந்துள்ளனர் . அவர்கள் பெயரில் போடலாம் என்றால் அவர்கள் வறுமையே அதற்குக் காரணம். அந்த கட்சி பிரமுகர்கள் பெயரில் போடலாம் என்றால் அவர்களோ தலைவி சொல்படி நடப்பவர்கள்.”

“அவ்வளவுதானே! அந்த தலைவி கணக்கிலேயே சேர்த்துவிடு!”

“அங்குதான் சிக்கலே பிரபோ! இந்திய அரசியல் தலைவர்கள் கணக்கெல்லாம் பல ஆண்டுகளாக கர்மாக்களால் நிரம்பி வழிகின்றன. அவர்கள் பெயருக்கு கர்மாக்களை transfer செய்தால் சிஸ்டம் ஏற்றக்கொள்ள மறுக்கிறது!”

“External hard disc?”

“ஏற்கனவே 10 YB டிஸ்க் ஒன்று வாங்கி அதுவும் நிரம்பி விட்டது. இன்னொன்று வாங்க பிரம்மாவின் special sanction தேவை… நீங்கள்தான் சென்று..”

“அதை மறந்துவிடு சித்ரகுப்தா! .. அவரே சென்ற போர்ட் மீட்டிங்கின்போது சேர்மன் திருமாலிடம் செம டோஸ் வாங்கி நொந்து போய் உள்ளார். இப்போ போய் கேட்டால் என்னைக் குதறிவிடுவார்”

“என்ன ஆயிற்று அவருக்கு?”

“வேறென்ன? எல்லாம் product quality தான். வர வர பிரம்மாவின் product quality standard மிக குறைந்து சேர்மனின் பூலோக இல்லங்களில் எல்லாம் கூட்டம் அம்முகிறதாம். “ஒரு காலத்தில் ஸ்ரீரங்கத்தில் நிம்மதியாக படுத்திருப்பேன். இப்போ ஒரு மணி நேரம் ஓய்வெடுக்க விடமாட்டேன் என்கிறார்கள் திருப்பதியோ சொல்லவே வேண்டாம்” என்று வருத்தப்படுகிறாராம்.. Vice சேர்மன் சிவனுக்கோ அதற்குமேல் கோபமாம்! பரோட்டா சூரிபோல இந்தியாவில் எல்லாவற்றையும் அழித்துவிட்டு முதலிருந்து ஆரம்பிக்கலாம் என திட்டம் சொல்லியிருக்காராம்”

“ஐயோ அவ்வளவு சிக்கலா பிரபு! சரி நான் இதை பெண்டிங்கில் வைக்கிறேன்!:

சில நாட்கள் சென்ற பின் எம கிங்கிரர்கள் ஒரு மானிடனை இழுத்து வருகின்றனர்.

“மகராஜா இவன் தமிழகத்தை சேர்த்தவன் நம் website ஐ எப்படியோ hack செய்து இங்கு நடந்த நிகழ்வுகளை அறிந்துகொண்டு அந்த பிரச்னைக்கு தனக்கு விடை தெரியுமென்கிறான்.”

எமதர்மன் அவனைப்பார்த்து கேட்கிறார்,

“மானிடனே எங்கே சொல்! அந்த பாவம் யாரைச் சேரும்?”

“சுவாமி! நிச்சயமாக அது அம்மாவையோ கட்சியையோ போய்ச் சேராது. அந்த முதியவர்களின் பிள்ளைகளையே போய்ச் சேர வேண்டும்”.

“சித்ரகுப்தா! இவன் சொல்வது எனக்கு புரியவில்லை! யார் அம்மா?”

“பிரபோ! இவன் அந்த கட்சியைச் சேர்ந்தவன். அம்மா என்பது அந்த கட்சி தலைவியை குறிக்கும் பெயர்.”

“யார்? அந்த கூட்டத்தில் மேடையில் ஆறு ஏர்கூலர் சகிதம் தனியே அமர்ந்து…?”

“ஆம் பிரபோ”

“சரி ! அந்த முதியோர் இறந்த பாவத்தை இந்த மானிடன் கணக்கில் சேர்த்துவிடு!”

மானிடன் : “சுவாமி! இதென்ன கொடுமை? நான் என்ன குற்றம் செய்தேன் ?”

“மானிடனே! இதற்கெல்லாம் மறைமுகமாக காரணமாயிருந்து, அதை சரி செய்யவும் முயற்சிக்காத ஒரு பெண்ணை, இன்னும் நீ அம்மா என்று நினைத்து கூப்பிடுவதால் உனக்கு இந்த தண்டனை!”